காங்கிரஸுக்கு ஹெச்.ராஜா அட்வைஸ்: அவங்களோட சேராதீங்க!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த ஏழு தமிழர்களும் விடுதலையாகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இது குறித்துப் பேசினார். “ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும். அவர்கள் விடுதலை எங்களுக்கு ஏற்புடையதல்ல” என்று கூறினார்.

இந்தி திணிப்பில் ஒன்றிய அரசு ஈடுபடாது என்றும், தமிழக அரசு தமிழை காக்க தவறிவிட்டதாகவும் ஹெ.ச்.ராஜா கூறியுள்ளார். “தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு இந்திய மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காலத்திலும் இந்தி திணிப்பு என்பது இருக்காது. கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்து வருகிறது. தமிழக திராவிட கட்சிகள் இருமொழிக் கொள்கை என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மாற்றுமொழியை அடிப்படையாகக் கொண்டு, 560 பள்ளிகள் இயங்கி வருகின்றன” என்று கூறினார்.

பால் விலை உயர்வு குறித்து பேசிய அவர், “பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி விட்டு, பால் விற்பனை விலையை ரூ.12 உயர்த்தியுள்ளனர். இதனால், டீ விலை ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல். பாலுக்கு ஜிஎஸ்டி இல்லை என பால்வளத்துறை அமைச்சருக்குத் தெரியவில்லை” என்றார்.

அமித் ஷாவின் பேச்சு குறித்து விளக்கம் அளித்த அவர், “’கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை, நாம் வேகமாக செயல்பட்டு நிரப்பாமல் விட்டுவிட்டோம். ஆனால், இந்த அரசின் மீது தற்போது வெறுப்பு வரத் தொடங்கிஉள்ளது. அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நாம் வேகமாக நிரப்ப வேண்டும். அதற்காக வேகமாக செயல்பட வேண்டும்’ என நிர்வாகிகளிடம் அமித்ஷா கூறினார். இது ஒரு அரசியல் தலைவர், அவரது நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் வகையில் சொல்லப்பட்டது. இது விவாதத்துக்குரிய பொருள் அல்ல” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.