சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரத்தில், சுந்தரம் நகர் 6-வது தெருவை சேர்ந்த ராஜேஷ் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து உறங்கினார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ராஜேஷ் மீது மர்மநபர் ஒருவர் தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.
இந்த தீ விபத்தில், பற்றி எறிந்த இவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தனர். அதில், வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பஷீர் என்பவர் மினிவேனின் உள்ள டீசல் டேங்கில் இருந்த டீசலை ஒரு துணியில் நனைத்து அதனை வேனில், தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது போர்த்தி தீ வைத்து விட்டு தப்பித்து செல்வது பதிவாகி இருந்தது.
அதன் பின்னர் போலீசார் பஷீரை கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்ததாவது, “ஏற்கனவே காதலித்த பெண்ணுடன் ராஜேஷ் நெருங்கி பழகியதால் அவரை எரித்து கொல்ல முயன்றதாக” தெரிவித்தார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில்,
“பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவருக்கு பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த பஷீர் இரவு நேரத்தில் ராஜேஷை கண்காணித்து தீ வைத்து எரித்துள்ளார். இதற்கிடையே தீக்காயம் அடைந்த ராஜேசை மருத்துவமனையில் இருந்தும் பஷீர் கவனித்து வந்து இருக்கிறார். ஆனால், தற்போது, கண்காணிப்பு கேமிரா காட்சிப் பதிவால் அவர் சிக்கி கொண்டார்.