குடிபோதையில் ரகளை: தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள்.!

குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளையராஜா (39). இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் புதுவைக்கு வந்தார். 

பின்பு மதியம் வேலை முடிந்ததும் புதுவை ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில் இளையராஜா வந்தார். அப்பொழுது அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் வந்த 4 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து கோனேரிக்குப்பம் ஆற்று பாலத்தை ரயில் கடந்த போது, அந்த வாலிபர்களின் செயல்கள் எல்லை மீறியதால் அவர்களை இளையராஜா தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இளையராஜாவிடம் தகராறு செய்து, அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் அவருக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டு துடிதுடித்து அந்த இடத்திலேயே கிடந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அந்த வழியாக சிறிது நேரம் கழித்து வந்த மற்றொரு ரயில் அடிபட்டு கிடந்த இளையராஜாவை பார்த்ததும் ரயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி இளையராஜாவை மீட்டு கண்டமங்கலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். 

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து இளையராஜாவை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நான்கு வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.