நாட்டுமருந்து என்ற பெயரில் விஷம் கொடுத்துக் கொலை? 6 மாத கர்ப்பிணியின் கருவைக் கலைக்க முயன்றபோது விபரீதம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆறு மாத கர்ப்பிணியின் கருவைக் கலைக்க  நாட்டு வைத்தியம் என்ற பெயரில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கணவன் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர். 

ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையை சேர்ந்த சிவரஞ்சனி- வேணு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சிவரஞ்சனி மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

ஆறு மாத கர்ப்பிணியான அவரை தனியார் மருத்துவமனைக்கு கணவர் வேணு அழைத்து சென்றுள்ளார். அங்கு மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்வதற்காக ஸ்கேன் செய்து பார்த்த தில் அந்த குழந்தையும் பெண் குழந்தை என்பது தெரிய வந்தது.

சிவரஞ்சனியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்த வேணு மற்றும் அவருடைய தாய் ஆகியோர் நாட்டு மருந்து என்ற பெயரில் பச்சிலைகளை அரைத்து குடிக்க கொடுத்தனர். இதனைக் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிவரஞ்சனிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிவரஞ்சனி உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்து சிவரஞ்சனியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சிவரஞ்சனிக்கு கருக்கலைப்பு என்ற பெயரில் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதாக வேணு மற்றும் அவருடைய தாயார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நரசராவ் பேட்டை போலீசார் வேணு மற்றும் அவருடைய தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சிவரஞ்சனி வயிற்றில் இருந்தது ஆணா, பெண்ணா என்று தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.