ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில், 27 லட்சம்ரூபாய் வைக்கப்பட்டிருந்த வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை, மர்ம நபர்கள் நேற்று முன் தினம் பெயர்த்து எடுத்து, அதை வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றனர்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பில்வாரா மாவட்டத்தில், ‘பாங்க் ஆப் பரோடா’ வின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இங்கு நேற்று முன் தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், ௨௭ லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து எடுத்து, அதை வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றனர்.
முன்னதாக, மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில், அடையாளம் பதிந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் மீது பெயின்டை தடவிச் சென்றனர்.
இது குறித்து, பெங்களூரில் உள்ள ஏ.டி.எம்., பாதுகாப்பு நிறுவனம், ராஜஸ்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்து, உஷார் படுத்தியது. போலீஸ் படையினர் உடனே மர்ம நபர்களை தேடி துரத்தினர்; இருந்தும், அவர்கள் தப்பினர்.
இது சம்பந்தமாக, வழக்கு பதிந்த போலீசார் அருகில் உள்ள மாவட்ட போலீசாரையும் உஷார்படுத்தி, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement