புதுச்சேரி: புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து பாக்கெட்டில் இந்தியில் வாசகம் இடம் பெற்றிருந்ததால், அதை பயன்படுத்த முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இவ்விவகாரம் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு எந்தவித கேள்வியும் எழுப்பாமல் அப்படியே நிறைவேற்றி மக்கள் நலனை புறக்கணித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையே புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில தினங்களாக வழங்கப்படும் பேதியால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நீர்சத்துக்கு வேண்டி வழங்கப்படும் ஓஆர்எஸ் பாக்கெட்டில் செய்முறை விளக்கம் இந்தியில் இடம்பெற்றுள்ளது. இதை புதிதாக வாங்கி பயன்படுத்தும் நோயாளிகள் எவ்வாறு உட்கொள்வது என்ற விபரம் தெரியாமல் புலம்பி வருகின்றனர். உயிர் காக்கும் மருந்துகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இந்தி திணிக்கப்பட்டு இருப்பதற்கு தன்னார்வலர்கள் கடும் எதிர்ப்பு தொிவித்து அங்கிருந்த மருத்துவ அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். எவ்வித நடவடிக்கை இல்லாத நிலையில், சுகாதாரத்துறையை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.