ஹெட்ஃபோன் யூஸ் பண்றீங்களா? 100 கோடி பேருக்கு இந்த பிரச்சினை!

உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், 100 கோடிக்கும் அதிகமான பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்களைப் பயன்படுத்துவதால் காது கேளாமை ஏற்படும் அபாயம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சத்தமாக இசையமைக்கும் இடங்களுக்குச் செல்வதாலும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் சாதனங்களைப் (personal listening devices-PLDs) பயன்படுத்துவதால் பாதிக்கப்படுகின்றனர். ஒழுங்குமுறையற்ற அதிக ஒலி எழுப்பும் இசை அரங்குகளுக்கு அவர்கள் செல்வதாலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வில், தனிப்பட்ட கேட்கும் சாதனங்களைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் 105 dB வரையிலான ஒலியளவைத் தேர்வு செய்கிறார்கள். பொழுதுபோக்கு இடங்களில் சராசரியாக 104 முதல் 112 dB வரையிலான ஒலி அளவுகள் அனுமதிக்கப்படுகின்றன. இது பெரியவர்களுக்கு 80 dB; குழந்தைகளுக்கு 75 dB என்ற அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரவுகளின் தொகுக்கப்பட்ட பகுப்பாய்வில் தனிப்பட்ட கேட்கும் சாதனங்களின் பயன்பாடு, அதிக ஒலி எழுப்பும் அரங்குகளுக்கு செல்வது, பதின்வயதினர் மற்றும் இளைஞர்களிடையே பாதுகாப்பற்ற அதிக ஒலியை கேட்கும் நடைமுறைகளுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-34 வயதுகுட்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் குறைந்தபட்சம் 24 சதவீதம் பேர் பாதுகாப்பற்ற நிலையில் அதிக ஒலியை கேட்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காது கேளாமை அபாயத்தை தடுக்க உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் “பாதுகாப்பான கேட்பதில் கவனம் செலுத்தும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று சர்வதேச ஆய்வாளர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. “பாதுகாப்பான ஒலியை கேட்கும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய செவித்திறன் இழப்பைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கங்கள், தொழில்துறை பொதுமக்கள் உடனடியாக முன்வர வேண்டும்.” என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த எண்களின் அடிப்படையில், உலகெங்கிலும் 0.67 முதல் 100 கோடிக்கும் அதிகமான பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் காது கேளாமை அபாயத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதாலும், அதிக ஒலி எழுப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாலும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. “தொடர்ந்து அல்லது ஒரே நேரத்தில் பாதுகாப்பற்ற முறையில் அதிக ஒலியை கேட்பது செவிப்புல அமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.” எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற கேட்கும் நடைமுறைகளால் ஏற்படும் சேதம் வாழ்நாள் முழுவதும் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் எனவும், சிறு வயதிலேயே அதிக சத்தத்தை கேட்பது வயது தொடர்பான காது கேளாமை பிரச்சினையின் போது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்காக முந்தைய 33 ஆய்வுகளை ஆய்வு செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள், தனிப்பட்ட கேட்கும் சாதனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இடங்களுக்கு செல்லும் சுமார் 19,000 க்கும் மேற்பட்ட நபர்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். தனிப்பட்ட கேட்கும் சாதனங்கள், பொழுதுபோக்கு இடங்கள் முறையே 17, 18 என மொத்தம் 35 பதிவுகளின் தரவுகளை பயன்படுத்தி 2000-2021 காலகட்டத்தில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மக்கள்தொகை காரணிகள் மற்றும் சில நாடுகளில் பாதுகாப்பாகக் கேட்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் ஆகியவற்றைக் கணக்கிடவில்லை என ஆய்வின் வரம்புகள் தரப்படுத்தப்பட்ட முறையில் இல்லாததையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.