நீலகிரி: நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக காரை துரத்தி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், அவ்வழியாக செல்லும் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வழி மறித்து வருகின்றன. இந்நிலையில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்த யானை, ஆக்ரோஷமாக பிலரி கொண்டு காரை துரத்தியது. விரைந்து செயல்பட்ட ஓட்டுநர், காரை பின்னோக்கி இயக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
யானையை கண்ட இருசக்கர வாகன ஓட்டிகளும் வண்டிகளை சாலையில் போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானைகள், வனத்துக்குள் சென்ற பிறகு வண்டிகள் அங்கிருந்து புறப்பட்டன. கெத்தை மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானைகளை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.