பாஜகவை சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். இவர் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து, கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். இந்த நிலையில் விஜேயந்திரனுக்கு பாஜக மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி மளிகை கடையில் பட்டாசு விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் நாகை அரசு மருத்துவகல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மருத்துவமனை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனையில் திமுக மற்றும் பாஜகவினர் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM