அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் லாரி மோதி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரகாசன் (52). இவரது மகன் திருமாறன்(13) அரியலூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சந்திரகாசன் தனது மகனை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அப்பொழுது காட்டுக்கொட்டாய் அருகே சென்ற போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் திருமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் சந்திரகாசனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரகாசனும் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த சந்திரகாசன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.