அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி: வைரமுத்து இரங்கற் பா!

வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று (நவம்பர் 21) மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

அவ்வை நடராஜன் மறைவுக்கு பல்வேறு தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர்

இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவ்வை நடராஜன் இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் வெளியிட்ட இரங்கல் பதிவு!

அவ்வை நடராஜன் இறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவில், “சிறந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அவர்கள், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அவ்வை நடராசன் அவர்கள் ‘உரைவேந்தர்’ அவ்வை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர்.

தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.

யாசகம் பெற்றதில் நிவாரணம்

தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்க முடியாது. தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே ‘பாதி அண்ணா’ எனப் பாராட்டப்பட்டவர். அவ்வை நடராசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தபோது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழாரம் சூட்டியவர். தமது இறுதிக்காலம் வரையிலும் கலைஞரின் புகழைப் போற்றி வந்தவர்.

தமது தமிழ்ப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை அவ்வை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப் புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்!

கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவில்,

“அய்யகோ!

அறிஞர் அவ்வை நடராசன்
மறைந்தாரே!

தமிழ்ச்சங்கத்தின்
ஏடொன்று எரிந்துவிட்டதே

அகிலம் தழுவி வீசிய
தமிழ்த்தென்றல்
தன் வீச்சையும் மூச்சையும்
நிறுத்திவிட்டதே

பட்டிமன்றம்
பொட்டிழந்துவிட்டதே

இனி என்னோடு
தனித்தமிழில் உரையாட
எவருளார்?

பேசுதமிழ் உள்ளவரை
உங்கள் பெருமை
வாழும் பெரும!”
என்று பதிவிட்டுள்ளார்.

அவ்வை நடராஜன் பணிகள்!

தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் அவ்வை துரைசாமி மற்றும் லோகாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1992ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். மறைந்த தமிழக முதல்வர் கலைஞருடன் நெருங்கி நட்பு பாராட்டியவர் அவ்வை நடராஜன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.