சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நடத்தப்பட்ட, 25 இடங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளினால் ,இந்த வருடத்தில் முற்றுகையிடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக இலங்கையில் இருந்து ,ஆட்களை அனுப்பி மோசடி செய்த 190 சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் இன்று (22) பாராளுமன்றத்தில் கூறினார்.
இதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ,பணி இடைநிறுத்தப்பட்டு இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு வந்த பின்னர் அவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஓமானில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த அமைச்சர் இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
“சுற்றுலா வீசா மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளளர். அந்த பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான் போன்ற நாடுகளில் விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டதால், சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களுக்கு தொழில் விசா வழங்கப்படுகிறது.
தொழில்வாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்ற பல பணிப்பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் பதிவுகளை ஓமான் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு முன்பே இடைநிறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், இப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை வழங்க முடியவில்லை இந்த வியடத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.