கடைசி கட்டத்தில் சீட்டு கட்டு போல் சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்…இந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலென் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஆலென் 3 ரன்னிலும், அதற்கடுத்து களம் இரங்கிய சாம்ப்மேன் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு கான்வேயுடன் அதிரடி ஆட்டக்காரக் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அபாரமாக ஆடிய பிலிப்ஸ் 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுபுறம் நிதானமாக ஆடிய கான்வே அரைசதம் அடித்தார். கான்வே 59 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய மிட்செல் 10 ரன்னிலும், நீஷம், ரன் எடுக்காமலும், சாண்ட்னெர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற கணக்கில் இந்திய அணி ஆட உள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.