கேரள மாநிலம், எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகுராம் (46), உஷா (44) தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று பழனிக்கு வந்த இருவரும் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அடிவாரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று அறைக்குச் சென்றவர்கள் இன்று மாலை 5 மணி ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விடுதிக்கு வந்த போலீஸார் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரகுராம், உஷா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அதில், `சிறிய விஷயத்துக்காக நிம்மி, கீதா, ரேகா, உஷா, சுபா, ரமேஷ், ரமா உள்ளிட்ட 10 பேர் எங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு அந்த 10 பேர்தான் காரணம். கேரளாவில் உள்ள பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பழனி போலீஸாரிடம் விசாரித்தபோது, “கேரள தம்பதிக்கு என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை வழக்கு பதிவு வரை சென்றுள்ளது. பிறகு அந்த வழக்கு பிணையில்லா வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதில் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். கேரளாவில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு கடிதம் உட்பட நடந்தவற்றை தெரிவிக்கவிருக்கிறோம்” என்றனர்.