சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டரில் ப்ளூ டிக் அங்கீகாரத்தை பயனர்களுக்கு மறுவெளியீடு செய்வதை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் 29ம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மறுவெளியீடு செய்யப்படும் என்றும், இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ப்ளூ டிக் மறுவெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். ஆள்மாற்றாட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நம்பிக்கை வந்தபின்னர் இதுபற்றி பரிசீலிப்போம். ஒரு போலி நபர் கூட இல்லை என்ற நிலை வரவேண்டும். அதுமட்டுமல்லாது நிறுவனங்களுக்கு, தனியாருக்கு என தனித்தனியாக வெவேறு நிறத்தில் டிக் வழங்குவது பற்றி அலோசித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. இது பல்வேறு தரப்பில் விவாதத்தை எழுப்பியது. இருந்தாலும் அந்த முடிவில் மஸ்க் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் ப்ளூ டிக்குடனேயே போலி ப்ரொஃபைல் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை ட்விட்டர் பயனர்கள் விவாதப் பொருள் ஆக்கினர். இந்நிலையில், ப்ளூ டிக் அங்கீகாரமே நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது அதனை மேம்படுத்திய வெர்ஷனாக வெளியிடுவோம் அதுவரை ப்ளூ டிக் சேவை நிறுத்திவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.