ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் பாக்., ராணுவ தளபதியானார்| Dinamalar

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, ௬௧, வரும் ௨௯ல் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த, ௨௦௧௬ல் மூன்றாண்டுகளுக்கு ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அவருக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருந்தாலும், ராணுவமே முக்கிய முடிவுகளை எடுக்கும். கடந்த ௭௫ ஆண்டுகளில், பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ராணுவ ஆட்சியே நடந்துள்ளது.

இந்நிலையில், மற்றொரு பணி நீட்டிப்புக்கு ஜெனரல் பஜ்வா மறுத்துள்ளார். இதையடுத்து அடுத்த ராணுவ தளபதியை தேர்வு செய்ய, ஆறு மூத்த அதிகாரிகள் பட்டியலை, அரசுக்கு ராணுவம் அனுப்பியது.

இதில், லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர், புதிய ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானின் இரண்டு முக்கிய உளவு அமைப்புகளான ஐ.எஸ்.ஐ., மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

இவர் தவிர, கூட்டுப் படைகளின் தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் ஷாஹிர் ஷம்ஷத் மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு படைகளின் தளபதி பதவி தான் மிகவும் உயரிய பதவியாகும். ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியது ராணுவ தளபதியே. அதனால், இந்தப் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இருவருக்கும் நான்கு ஸ்டார் ஜெனரல் நிலைக்கு பதவி உயர்வு வழங்கவும், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரைத்துள்ளார்.

அதிபர் ஆரிப் ஆலம் ஒப்புதல் அளித்தபின், இவர்கள் பதவியேற்பர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.