மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிக்க வைத்து தீவிரவாத தாக்குதல் முயற்சியில் முகமது ஷாரிக் என்பவன் ஈடுபட்டான். இந்த சம்பவம் அரங்கேறும் பொழுது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வருகிறான். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் குக்கர் வெடிகுண்டை கையில் வைத்த போட்டோ எடுத்து கொண்ட முகமது ஷாரிக் எதற்காக ஈஷா மையம் சென்றான். போலீஸ் விசாரணையை திசை திருப்பதற்காக இப்படி செய்தானா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது.
இதனையில் முகமது ஷாரிக் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை பார்த்ததாக கோவையைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஆனந்தன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கால் டாக்ஸி டிரைவர் ஆனந்தனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் “நீங்கள் பார்த்தது முகமது ஷாரிக் தானா? அவனை எப்படி தெரியும்? அங்கு புகைப்படம் மட்டும் தான் எடுத்தானா?” போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர். அதற்கு கால் டாக்ஸி டிரைவர் ஆனந்த் “இரண்டு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் அவன் போட்டோவுடன் செய்தி வெளியானதை பார்த்தேன். அப்பொழுது தான் எனக்கு நினைவு வந்தது. ஷாரிக்குடன் இரண்டு நபர்கள் இருந்தனர்”என போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் தீபாவளி அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தால் தெரியும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினம் ஷாரிக் கர்நாடகாவில் இருந்தது அவனது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதன் காரணமாக கால் டாக்ஸி டிரைவர் ஆனந்த் கூறுவது உண்மைதானா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கால் டாக்ஸி டிரைவர் ஆனந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆராய கோவை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.