குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை: பல லட்சம் பறித்த பெண் உட்பட 2 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் இளம்பெண்களுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியதோடு, இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுக்கு வலை விரிக்க வைத்து, அவர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களையும் எடுத்து பல லட்சம் பறித்த, பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், விஜயவாடாவில் உள்ள படமடாதோட்டவாரி தெருவை சேர்ந்தவர் பசராகுரு நாகசாய். இவர் படமடா மேல்நிலைப்பள்ளி அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நாகசாய் தனது கடைக்கு வரும் ஏழை பெண்களிடம் உதவி செய்வது போல பேசி நடித்து தனது வலையில் விழவைத்துள்ளார். பின்னர், அவர்களை வீட்டிற்கு அழைத்து குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும் ஆபாச வீடியோவை காண்பித்து இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுடன் சாடிங் செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் அந்த வாலிபர்களை லாட்ஜூக்கு வரவழைத்து, சாட்டிங் செய்த பெண்ணை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதுபோன்று பல பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு பசராகுரு நாகசாய்க்கு 2 ஆண்கள் உடந்தையாக செல்பட்டுள்ளனர்.

மேலும் இன்ஸ்டாகிராமில் பழகி லாட்ஜூக்கு வரும் வாலிபர்கள், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவையும் எடுத்து வைத்துள்ளனர். அதை காண்பித்து சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் பல லட்சம் பறித்துள்ளனர். இதேபோல் அசோக்நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் லாட்ஜில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது பசராகுரு நாகசாயியுடன் மற்றொரு வாலிபர் அங்கு சென்று மிரட்டி, அந்த இளைஞரிடம் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.  

நாகசாயியின் மிரட்டலை பார்த்த அந்த இளைஞர் ரூ.1.90 லட்சத்தை கொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் லாட்ஜில் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த இளைஞர்  விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தீரனிடம் கடந்த வாரம் புகார் அளித்தார். இதுகுறித்து படமடா மேற்கு காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிந்து  பசராகுரு நாகசாயியுடன் ஒரு இளைஞரை கடந்த 23ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து கைதானவர்கள் எத்தனை பெண்களை இதுபோன்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். எத்தனை வாலிபர்களிடம் எவ்வளவு பணம் பறித்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.