தமிழகத்தில் ரயில்வே திட்டத்துக்கு ரூ.3946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

புதுடெல்லி: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 2023-24ம் ஆண்டின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்துத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதுபோல், 2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை வல்லுநர்கள், நிதித்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

இதில், பணவீக்க அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடிய சூழல், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் மீளும் பொருளாதாரம், மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. ஜிஎஸ்டி விதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், தொழில்துறையினருக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கூறப்பட்ட  ஆலோசனைகளின் அடிப்படையில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்து  தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:
* மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை விரைவாக முடிப்பதற்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். அந்த பணிக்காக உரிய அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். இப்பணியை முடிப்பதற்கான முழு ஒத்துழைப்பை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு வழங்கும்.
* நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு முழு ஆதரவை வழங்க வேண்டும்.
* செஸ் வரியை அடிப்படை வரியுடன் இணைத்து மாநிலங்களுடன் அந்த வரி வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்.டி இழப்பீட்டுக்கான கால வரம்பை குறைத்து, அதை 2 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
* சென்னையில் பெருவெள்ளம் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2021-2022 முதல் 2025-2026 வரையிலான கால கட்டத்துக்கு ரூ.500 கோடியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்தது, அந்த தொகை தற்போது வரையில் வழங்கப்படவில்லை, அதை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
* நகர்புற பகுதிகளில் ஒன்றிய அரசின் வீடு கட்டிகொடுக்கும் திட்டத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.1.5 லட்சமாக உள்ளது. கிராமபுறத்துக்கு ரூ.72 ஆயிரமாக உள்ளது.  இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.7 லட்சம் மற்றும் ரூ.1.68 லட்சமாக உள்ளது. எனவே, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பை அதிகரித்து வழங்க வேண்டும்.
* ஒன்றிய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டு உள்ளதால், அது மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, இதில் மாநிலத்தின் பங்களிப்பு 172 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த இடைவெளி களையப்பட்டு, இரு அரசுகளும் தலா 49 சதவீதம் பங்களிப்பை அளிக்க வகை செய்ய வேண்டும்.
* தமிழகத்தில் மரங்கள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகம். அதற்கான பிரத்யேக மாவட்டங்களும் உள்ளன. அதனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களுக்கான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.
* சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்காக, ஒன்றிய அரசும், தமிழக அரசும் 50-50 சதவீதம் பங்களிப்பை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், அதற்கான நிதியை 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
* தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும். தாம்பரம் – செங்கல்பட்டு  4வது தடத்துக்கு ரூ.600 கோடி, அத்திப்பட்டு – குமிடிப்பூண்டி 3, 4வது தடத்துக்கு ரூ.500 கோடி, திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி-ஓசூர் புதிய தடத்துக்கு ரூ.1486 கோடி, அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழிப்பாதைக்கு ரூ.1,360 கோடி நிதியை ஒதுக்கி, இத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மேலும், சென்னை – மதுரை, சென்னை -கோவை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கைகள் வைத்தார்.

மாநிலங்களுக்கு நிதி உரிமை
ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில், ‘கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநிலங்களும், தங்கள் மாநிலத்துக்கான நிதியை அதிகரிக்கும்படி கோரின. மாநிலத்தின் நிதி ஆதாரங்களை உரிமையையும் நிலை நாட்ட வேண்டும். வாஜ்பாய் ஆட்சியில் எப்படி இருந்ததோ அதேபோல் செயல்படுத்த வேண்டும் என கோரப்பட்டது. இந்த கோரிக்கையை பாஜ ஆளும் மாநிலங்களும் முன் வைத்தது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது,’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.