கோவை நகரம் உருவாகி 218 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவை நகரம் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள வீசிஎஸ்எம் என்ற தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் ஹேப்பி கோயம்புத்தூர் டே என்ற எழுத்துக்கள் வடிவில் மைதானத்தில் அமர்ந்து கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் தொழில்துறை அதிகமாக உள்ள நகரமும் கோவை தான். இதனால், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படுகிறது. கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமானது. அருகே கேரள எல்லையையும், நீலகிரி, ஊட்டி, சத்யமங்கலம் ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களையும் அருகருகே பெற்ற நகரமாக விளங்குகிறது. திருப்பூர், ஈரோடு போன்ற பின்னலாடை மற்றும் மஞ்சள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் மாவட்டங்களும் இதன் அருகிலேயே இருக்கின்றன. தண்ணீருக்கு சிறுவாணி, மருதமலை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா இடங்களும் இருக்கின்றன.
தமிழகத்தில் அதிக வட இந்தியர்கள் புலம்பெயர்ந்து வந்து தங்கியிருக்கும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாகவும் கோவை இருக்கிறது. தொழில் நகரமாக இருப்பதால் இங்கிருக்கும் வேலை வாய்ப்புகளுக்கு வட இந்தியர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால், புலம்பெயர் வாசிகளை கோவை முழுவதும் அதிகம் காணலாம். இதுமட்டுமல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த தயாரிப்புகள் எல்லாம் கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும் புகழை கொண்டிருக்கும் கோவை உருவான நாளை அம்மாவட்ட மக்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர்.