புதுடெல்லி: ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.
இதையடுத்து ரஜ்விந்தர் சிங் தொடர்பாக தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என்று குயின்ஸ்லாந்து போலீஸார் அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக போலீஸாரிடம் பிடிபடாமல் ரஜ்விந்தர் சிங் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் அண்மையில் அவரை டெல்லியில் ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்தனர். டெல்லி அதிகாரிகள், போலீஸாரின் உதவியுடன் ஆஸ்திரேலியாவின் பெடரல் போலீஸார் (ஏஎப்பி), குயின்ஸ்லாந்து போலீஸ் சர்வீஸ் (கியூபிஎஸ்) இந்த கைது நடவடிக்கையை எடுத்தனர்.
இதுதொடர்பான தகவலை குயின்ஸ்லாந்து மாகாண போலீஸார், ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். ரஜ்விந்தர் சிங் கைது தொடர்பான தகவலை இந்திய நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர் அனுமதி பெற்று ரஜ்விந்தர் சிங் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுவார் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கியூபிஎஸ் போலீஸ் கமிஷனர் கேத்தரினா கரோல் கூறும்போது, “இந்திய அதிகாரிகள், போலீஸாரின் உதவியுடன் கியூபிஎஸ், ஏஎப்பி பிரிவு போலீஸார் இணைந்து ரஜ்விந்தர் சிங் கைது செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய இந்திய அதிகாரிகள், போலீஸார் அதிக அளவில் உதவி புரிந்தனர்” என்றார்.