68 வயது முதியவரை தனிமைக்கு அழைத்த இளம்பெண்; வீடியோ எடுத்த கணவன்! – மிரட்டி ரூ.23 லட்சம் பறிப்பு

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த ராஷிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர்கள். திருமணத்துக்குப் பின்பு நிஷாத், ராஷிதா தம்பதியினர் ஆடம்பரமாக வாழ என்ன செய்யலாம் என ரூம் போட்டு யோசித்திருக்கின்றனர்.

வித விதமான வீடியோக்களை யூடியூபில் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என அவர்களுக்கு ஐடியா தோன்றியது. யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை போட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவில் வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் திட்டம் கைகொடுக்காததால் அடுத்ததாக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என யோசித்திருக்கின்றனர். அதற்காக வலைதளங்களில் அந்தரங்க விஷயங்களை தேடும் வசதியான முதியவர்களை ஸ்கெட்ச் போட்டு வளைத்து பணம் கறக்கலாம் என தம்பதியினர் திட்டமிட்டிருக்கின்றனர் . முகநூல் மூலமாக வயது முதிர்ந்த ஆண்களுக்கு வலை விரித்திரிக்கிறார் ராஷிதா. அந்த வலையில் மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியை சேர்ந்த செல்வந்தரான 68 வயது முதியவர் சிக்கினார்.

தம்பதி

முதியவரின் இன்பாக்ஸுக்குச் சென்று தன்னுடைய போட்டோக்களைப்போட்டு கிறங்கடித்திருக்கிறார். அவருடன் நெருங்கி பழகிய ராஷிதா கணவனின் ஆலோசனைப்படி அந்த முதியவரை ஆலுவாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அந்த வீட்டில் வைத்து முதியவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் ராஷிதா. அதை அவருடைய கணவர் நிஷாத் மறைந்து இருந்து கேமிரா மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு முதியவரிடம் இருந்து ராஷிதா தொடர்ந்து பணம் வாங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் விழித்துக்கொண்ட முதியவர் பணம் கொடுக்க தயங்கியிருக்கிறார். அப்போது தன்னுடன் தனிமையில் இருந்த சமயத்தில் எடுத்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி ராஷிதா மிரட்டியிருக்கிறார்.

பேரப்பிள்ளைகளும் வளர்ந்துவிட்ட நிலையில், தன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியானால் மானம் கப்பலேறிவிடும் என நினைத்த முதியவர் ராஷிதாவின் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்திருக்கிரார். ஒரு வருடத்துக்குள்ளாக முதியவரிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் பறித்திருக்கிறார் ராஷிதா. முதியவரிடமிருந்து கறந்த பணத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி மணாலி, லடாக் என கணவன் நிஷாத்துடன் டூர் சென்றிருக்கிறார். டூர் செல்லும் ஊர்களின் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

கைது

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராஷிதாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. மேலும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட தம்பதியர், அவ்வப்போது முதியவரை மிரட்டி பணம் பறித்தும் வந்திருக்கிறது. முதியவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் குறைந்துள்ளதையும், அவர் மேலும் பலரிடம் கடன் பெற்றுள்ளதையும் அறிந்த குடும்பத்தினர் அவரிடம் என்ன நடந்தது என கேட்டிருக்கின்றனர். வேறு வழி இல்லாமல் நடந்த முழு விவரத்தையும் குடும்பத்தினரிடம் முதியவர் கூறியிருக்கிறார் . இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ராஷிதாவையும் அவருடைய கணவர் நிஷாத்தையும் கைதுசெய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆறு மாதங்களேயான இரு குழந்தைகள் இருப்பதால் ராஷிதாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. நிஷாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.