விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய சீமான் “இரண்டு படங்கள் நடத்திவிட்டால் தலைவா என்கிறார்கள், தமிழ்நாடே உனக்கு காத்திருக்கிறது என்கிறார்கள், எங்கு காத்திருக்கிறது. உடனே நாடாள வந்த மகாராஜா என்று துதி பாடுகிறார்கள். இது தமிழ்நாடா? இல்லை தரிசுக்காடா?
தமிழின மக்கள் ஒன்றிணைந்தால் தான் நமது வாழ்வு பொன்னாகும் இல்லையென்றால் மண்ணாகும். நீங்கள் சாதி மத உணர்வுகளை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் என்பதை முன்னிறுத்தி முன்னேறி வரும் பொழுது தான் வெல்ல முடியும். நாம் அனைவரும் இணைந்து பின்னடையாமல் முன்னேறுவோம். இதுதான் தமிழர்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு” என பேசினார்.
மேலும் பேசிய சீமான் “ஒரு நாள் நானும் என் தம்பியும் டெல்லிக்கு சென்று இருந்த போது விமான நிலையத்தில் நான் மட்டும் முன்னாடி தனியாக சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென என்னை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. என்னுடன் வந்த அனைவரும் பதறிப் போனார்கள். உடனே சுற்றி நின்ற இந்திய ராணுவ வீரர்கள் கட்டிப்பிடித்து அண்ணா ஒரு போட்டோ, அண்ணா ஒரு செல்ஃபி எடுக்கலாமா என கேட்டார்கள்.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் நமக்கு ஆள் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் நமது சொந்தங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அங்கு 80 வயது ஆட்கள் எல்லாம் சீமான் அண்ணா என்று தான் அழைப்பார்கள்” என நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கிடையே புது கதையை சீமான் கூறியுள்ளார்.