புதுடெல்லி: அரசியல் சாசன தின நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை நாம் அனுசரிக்கிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் தினத்தை நாடு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, மனிதநேயத்தின் எதிரிகள் இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது. தீவிரவாதிகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு, தங்கள் உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது’’ என கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செத்துகிறேன். தீவிரவாதிகளுடன் போரிட்டு தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது’’ என கூறியுள்ளார்.