லண்டன்: குஜராத்தில் எதிர் வரவிருக்கும் தேர்தலுக்கு, பாஜக மற்றும் நரேந்திர மோடி மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்ட விரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்,
விரைவில் இங்கிலாந்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கார் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள், பாஜகவுக்கு ஆதரவாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்டமும் வகையில் கார் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
குஜராத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு பாஜக மற்றும் நரேந்திர மோடி மீது எங்கள் அன்பையும் ஆதரவையும் காட்ட விரும்புகிறோம் என்று அமைப்பாளர் ஒருவர் கூறினார்.
இதற்காக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) லண்டனில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, இந்த கார் பேரணியை ஏற்பாடு செய்திருக்கும் என்.ஆர்.ஐகளில் ஒருவரான ஹிர்தேஷ் குப்தா கூறுகிறார்.
இங்கிலாந்தில் நிலவும் சீரற்ற காலநிலை, கடும் குளிர் காரணமாக நடந்து செல்வதைவிட கார் பேரணி சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம் என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.
“பாஜகவுக்கு வாக்களிக்க குஜராத் மக்களுக்கு உரத்தக் குரலில் செய்தி அனுப்பும் அடையாளப் பேரணியாக இது இருக்கும். நாங்கள் எங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் காட்ட விரும்புகிறோம், மேலும் மோடிக்கு ஆதரவாக நிற்கிறோம், அவரை ஊக்குவிக்கிறோம் என்று குஜராத்தில் உள்ள குடும்பங்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறோம். அனைவரும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும், எனவே பாஜகவுக்கு வாக்களியுங்கள்.பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத் மிகவும் முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலமாக மாறியது” என்று குப்தா கூறினார்.
குஜராத் மாநிலத்திற்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜகவும், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது என பாஜக உறுதி அளித்துள்ளது.