வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு: உரிய சட்டம் இயற்ற அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசின் திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வல்லம்கிராமத்தில் சிப்காட் அமைக்க கடந்த 1997-ல் வசந்தா கங்காதரன் என்பவருக்கு சொந்தமான 19.08 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.5 ஏக்கருக்கு மட்டுமே கடந்த 2016-ல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, செய்யதா மத்தீன்,முகமது இம்ரான் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களும் கடந்த 1999-ல் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலத்துக்கான இழப்பீடுகளும் முறையாக வழங்கப்படவில்லை. அதேபோல தங்களது நிலத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையான பதில் கிடைக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். மாநில தகவல் ஆணையர்எஸ்.முத்துராஜ் முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. அப்போது நில உரிமையாளர்களும், நில ஆர்ஜித சிறப்பு வட்டாட்சியரும் ஆஜராகினர். அப்போதுசிறப்பு வட்டாட்சியர், ‘‘மனுதாரர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அரசின் கருவூலத்தில் உள்ளது. அதற்கான பில்கள் காலாவதியாகி விட்டன’’ என்றார்.

இதையடுத்து, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பயன்பாட்டுக்காக நிலம்கையகப்படுத்தும்போது, இழப்பீட்டுத் தொகையுடன் நில உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு கடந்த 2013-ம்ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் வழிவகை செய்துள்ளது.

விளைநிலங்களை கையகப்படுத்தும்போது அதே அளவுக்கு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழு இழப்பீட்டுத் தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

அதேநேரம் சிப்காட் போன்றதொழில் பூங்காக்கள் மற்றும் வணிகநோக்கத்துக்காக நிலங்களைகையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என மாநில திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது.

மக்களுக்கு நம்பிக்கை வரும்: இதே நடைமுறையை பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கும், நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்டத்துக்கும் செயல்படுத்தினால் நிலத்தை மனமுவந்து கொடுக்கும்மக்களுக்கும் நம்பிக்கை கிடைக்கும். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். மனுதாரர்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இழப்பீட்டுடன் நில உரிமையாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.