சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் நிதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மிலாப் செயலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரினார். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க நன்கொடையாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், இளைய பாரதம் யுடியூப் சேனலின் உரிமையாளருனான கார்த்திக் கோபிநாத் மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது கோவிலின் செயல் அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஆகியோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், பதிவான வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து, கோவில் திருப்பணிகளுக்காக மிலாப் செயலி மூலம் வசூலித்த 30 லட்சத்து 77 ஆயிரத்து 801 ரூபாய் 88 காசுகளை கோவில் திருப்பணிக்கான ஸ்தபதி கணக்கில் செலுத்த அனுமதிக்கவும், அதற்காக தன்னை நன்கொடையாளர் என அங்கீகரிக்கவும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்து அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.