வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்



வியட்நாமில் உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கட்டணத்தை வழங்குவதற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அண்மையில் படகு மூலம் கனடாவுக்கு செல்ல முயன்ற 303 இலங்கையர்கள் சர்வதேச கடலில் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர்.

அவர்களில் 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

இந்தநிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக அவரது மனைவி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு குறித்த நபரின் மனைவியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சருக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், குறித்த நபரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கட்டணத்தை வழங்குவதற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.”    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.