ரூ.1 கோடி கடன் உயிரை பறித்தது பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை; பெரியகுளத்தில் பரிதாபம்

பெரியகுளம்:  பெரியகுளத்தில் ரூ.1 கோடிக்கும் அதிகமான கடன் மற்றும் தந்தை பணிக்கு செல்லாதது உள்ளிட்ட காரணங்களால், பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி(62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.

மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாராயணசாமி வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மதுமிதாவின் பெற்றோரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் வேதனையடைந்த சுமித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து மகளிடம் கூறியபோது அவரும் சம்மதித்தார். இதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் நாராயணசாமி வீட்டில் இல்லாதபோது, மதுமிதா பூச்சிக்கொல்லி மருந்தையும், தாய் சுமித்ரா அதிகளவு சர்க்கரை நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளனர்.

தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்கள் தற்கொலைக்கு காரணம் நாரயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் என ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தலைமறைவாக உள்ள நாராயணசாமியை தேடி வருகின்றனர். கடன் தொல்லை மற்றும் பெற்றோரின் கருத்து வேறுபாடு காரணமாக, பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.