பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் ஆயுர்வேதத்தை இணைக்க யோசனை – தேசிய பேரவை உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ 

  • பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை

 ஆயுர்வேத வைத்தியத் துறையின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அதனை  அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைப்பது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப  குழு அண்மையில் (26) கவனம் செலுத்தியது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்க்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில்  கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், சுகாதார சேவையை விரிவுபடுத்துவது தொடர்பான தேசிய கொள்கைகளை தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் தற்போதைய தடைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஒரு நிலையான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கல்வி முறைமையை மறுசீரமைப்பதற்கான திட்டம் பற்றிய ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்றும் பாராளுமன்றத்தில்  இடம்பெற்றது.

கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சை, திறன்களைக் கொண்ட தலைமுறையை உருவாக்கும் வகையில் மாற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அது தொடர்பில் நிலைமாறு காலமொன்று தேவை எனவும், இது தொடர்பான முன்னோக்கிய வழிகள் அடங்கிய முன்மொழிவொன்றை  குழுவுக்கு சமர்பிக்குமாறும் தேசிய பேரவை உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும், கல்வி முறையின் மூலம் தொழில் பயிற்சி மற்றும் திறன்மிக்க தொழிலாளர்களை அங்கீகரித்து மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ விஜித பேருகொட, கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அறம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி, கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ ரவுப் ஹக்கீம் ஆகியோர் அடுத்தடுத்து இடம்பெற்ற குழுவின் இரு கூட்டங்களிலும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.