இந்தியா என்னில் ஒரு பகுதி: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி!

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில்,
கூகுள்
நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்ஜித் சிங், பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம் வழங்கினார். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சையின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலை சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தரன்ஜித் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷன் விருதை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரை சுந்தரின் உத்வேகப் பயணம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை பலப்படுத்துகிறது. உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

விருதை பெற்றுக் கொண்ட சுந்தர் பிச்சை, “இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அந்த உணர்வை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளர்ந்தது எனது அதிர்ஷடம். என் ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர எனது பெற்றோர்கள் நிறைய தியாகங்களை செய்துள்ளனர்.” எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தை காண்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று சுந்தர் பிச்சை கூறினார். டிஜிட்டல் பணம் செலுத்துதல் முதல் குரல் தொழில்நுட்பம் வரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதுமைகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கூகுள் மற்றும் இந்தியா இடையேயான சிறந்த கூட்டாண்மையைத் தொடர நான் எதிர்நோக்குகிறேன், தொழில்நுட்பத்தின் பலன்களை அதிகமான மக்களுக்குக் கொண்டு சேர்க்க நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகளை வணிகங்கள் பயன்படுத்துகின்றன, மேலும் கிராமப்புற மக்கள் உள்பட ஏராளமான மக்கள் முன்பை விட அதிகமாக இணைய அணுகலைப் பெற்றுள்ளனர்.” எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு… பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி யாருக்கு சாதகம்?

“பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வை நிச்சயமாக அந்த முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பாக உள்ளது. இரண்டு தசாப்தங்களாக அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் கூகுள் தொடர்ந்து முதலீடு செய்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை சிறப்பாக்கி வருகிறது. அந்த அனுபவம் என்னை கூகுளுக்கான பாதையை நோக்கி அழைத்துச் சென்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்க உதவும் வாய்ப்பாக அதனை பார்க்கிறேன்.” எனவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.