நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். நானும் கணவரும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள். எங்களுக்கு ஒரே பெண். பொறியியல் பட்டதாரி. அவளுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் முடித்தோம். மருமகன் அரசு வேலையில் இருக்கிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். சந்தோஷமாக வாழ்வதற்கான அத்தனை அசீர்வாதங்களையும் வாழ்க்கை கொடுத்திருந்தாலும், என் மகமகனின் குணத்தால் என் மகளின் வாழ்க்கையே நரகமாகிக் கிடக்கிறது.
திருமணமான நாள் முதலே மருமகனின் குணம் சரியில்லைதான். அதிகமாகக் கோபப்படுவார். அனைவர் முன்னிலையிலும் என் மகளை மரியாதையின்றி நடத்துவார். அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது எங்களையும் சட்டை செய்ய மாட்டார். அவர் பெற்றோரோ, ‘அவன் ஒரே பையன், செல்லமா வளர்ந்துட்டான். எங்ககிட்டயும் இப்படித்தான் முரடனா நடந்துக்குறான். போக போக சரி ஆகிடுவான்’ என்றார்கள். வேறு வழியில்லாததால் நாங்கள் அந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்தோம். மனைவி, குழந்தை என்றான பிறகு குடும்பஸ்தனாக அவர் பக்குவமடைந்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் நாளுக்கு நாள் அவர் குணம் மோசமாகிக்கொண்டே போனது, அல்லது முழுமையாக வெளிப்பட ஆரம்பித்தது.
எங்கள் மருமகன் மிகவும் திறமையானவர். போட்டித் தேர்வு எழுதி அரசு வேலை பெற்றவர். எனவே சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அவருக்கு அதிகம். அதற்கு இணையாக ஈகோவும் உண்டு. இவையெல்லாம் சேர்ந்து, ‘நான் யாரு தெரியுமா, எனக்கு முன்னாடி நீங்கயெல்லாம் ஒண்ணுமே இல்ல’ என்பதாக அனைவரையும் மட்டம் தட்டுவார். இதில் அதிகம் பாதிக்கப்படுவது, அவர் கூடவே இருக்கும் என் மகள்தான். இவற்றுடன் ஆணாதிக்கமும் சேர்ந்து அவளை கொடுமைப்படுத்துவார்.
பொறியியல் பட்டதாரியான என் மகளை வேலைக்குச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததில் இருந்து, அவருக்கு வீட்டுக்கு வெளியில் என்ன பிரச்னை என்றாலும் வீட்டில் எங்கள் மகள் மீது காரணமே இல்லாமல் எரிந்து விழுவது, அடிப்பது என குடும்ப வன்முறை செய்வது வரை துன்புறுத்துகிறார். உயர் பதவி, சம்பள உயர்வு, சேர்க்கை என எல்லாமுமாகச் சேர்ந்து இப்போது அவர் குடிப்பழக்கமும் தீவிரமாகியுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து எங்கள் மகளை கொடுமைப்படுத்துகிறார். அவர் முரட்டுத்தனமாக அடித்து உடலில் காயங்களுடன் எங்கள் மகளை பார்க்கும்போதெல்லாம், பெற்ற மனம் பதறுகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. இருமுறை காவல் நிலைய புகார் வரை கூட சென்றிருக்கிறோம்.
ஒரு சைக்கோபோல மாறிக்கொண்டிருக்கும் மருமகனின் நடவடிக்கைகளால், எங்கள் பெண் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்றெல்லாம் நாங்கள் பதறுமளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது நிலைமை. மேலும், இப்போது வரும் செய்திகள் எல்லாம் எங்கள் அச்சத்தை அதிகப்படுத்துகிறது.
’எந்த சந்தோஷமும் இல்லாத, மேலும் உடல், மன துன்புறுத்தல்கள் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கை எதற்கு உனக்கு? விவாகரத்து செய்துவிடு. பத்திரமாக எங்களுடன் வந்துவிடு. நீ படித்திருக்கிறாய், வேலைக்குச் செல்லலாம். உன் குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான பொருளாதார சேமிப்பு நம்மிடம் இருக்கிறது’ என்றெல்லாம் பேசினோம் எங்கள் மகளிடம். ‘எனக்கு இந்த கணவர் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், என் மகளுக்கு அப்பா வேண்டும்’ என்று, 10 வருடங்களுக்கு முந்தைய பெண்கள் பேசுவது போல பேசுகிறாள் அவள். எங்கள் மருமகன் தன் மகளிடம் ஓர் அப்பாவாக அன்பாக இருக்கிறார். ஆனால், அந்த அடிப்படை கடமையை அவர் செய்வதற்காக எங்கள் மகளை நாங்கள் அவருக்கு ஆயுளுக்கும் பலிகொடுக்க முடியுமா?
என் மகளுக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, கணவரை விவாகரத்து செய்த பின்னர் தன் மகளை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்தெடுப்பதில் தடுமாறியது, ஆண் துணை இல்லாத அவரை இந்த சமூகம் நடத்திய விதத்தை பார்த்தது என இவைதான் என் மகள் விவாகரத்துக்கு மறுக்கக் காரணம். ஆனால், கசப்பான மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி சிங்கிள் பேரன்டாக வெற்றிகரமாக வாழும் பெண்களை அவள் உதாரணமாகப் பார்க்க மறுக்கிறாள்.
சரிசெய்யக்கூடிய பிரச்னைகளுக்கு எல்லாம் பிள்ளைகளுக்குத் தவறான அறிவுரை கூறி திருமண உறவில் இருந்து பிரிக்கும் பெற்றோர் வகை அல்ல நாங்கள். எங்களது முடிவு, மகளின் உயிருக்கே பாதுகாப்பற்றுப் போன சூழ்நிலையில் இருந்து உருவானது. பெண்ணுக்குப் புரியவைப்பது எப்படி?