நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – அவையை முடக்குவதில்லை என காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் புதன்கிழமை (டிச. 7) தொடங்குகிறது. இதில் தேவையின்றி அவையை முடக்குவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இமாச்சல பிரதேசம், குஜராத் தேர்தல் முடிவுக்கு முதல்நாள் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சீனாவுட னான எல்லைப் பிரச்சினை, கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசு – உச்ச நீதிமன்றம் இடையிலான சமீபத்திய மோதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான கட்சியின் வியூக குழு கூட்டத்துக்குப் பிறகு, நாடளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து பட்டியல் தயாராகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கோருவதும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த நுணுக்கமான நிலைப்பாட்டை காங்கிரஸ் இறுதி செய்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட சைபர்-தீவிரவாத தாக்குதல் குறித்து அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பும். தேவையின்றி அவையை முடக்க மாட்டோம். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.