சென்னை அடுத்த மாதவரம் அருகே இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான மதரசா செயல்படுகிறது. இந்த மதரசாவில் பீஹாரைச் சேர்ந்த சேர்ந்த 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த குழந்தைகளை சிலர் அடித்துத் துன்புறுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய ஆய்வில் துன்புறுத்தலுக்கு ஆளான 12 குழந்தைகளை மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளை துன்புறுத்தியதாக சென்னையை சேர்ந்த இருவரையும் பீஹாரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக மற்றும் பீஹார் மாநில தலைமைச் செயலர்களுக்கும் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் சில குழந்தைகளுக்கு உடலில் காயம் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.