நாடாளுமன்ற குளிர்கால தொடர் நாளை தொடக்கம்: இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதைத் தொடர்ந்து, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் 29ம் தேதி வரை 23 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதன் 17 அமர்வுகளில், 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று மாலை அலுவல் ஆய்வுக்குழு கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இதில் மக்களவை அலுவல்கள் குறித்தும், அவையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.