சில்கா: அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படைக்கு தேர்வு செய்யப்பட்ட 341 பெண்கள் உட்பட 3,000 பேர் பயிற்சி பெறும் ஒடிசாவின் ஐஎன்எஸ் சில்கா மையத்தில் கடற்படை பணியாளர் பிரிவு தலைவர் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்.
அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அக்னி வீரர்கள் என அழைக்கப்படும் இவர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றுவர். அதன்பின் இவர்களில் 25 சதவீதம் பேர் மறு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்கமான பணியில் 15 ஆண்டுகாலம் பணியாற்றுவர். மற்றவர்களுக்கு துணை ராணுவப்படை மற்றும் மாநில போலீஸ் படைப்பிரிவில் சேர இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படைக்கு முதல் கட்டமாக 341 பெண்கள் உட்பட 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படை பயிற்சி ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நவம்பர் மாதம் தொடங்கியது.
கடற்படையில் பெண் அதிகாரி கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மாலுமிகளாக பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. பெண்கள் பயிற்சி பெற ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் பல வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இவர்கள் தங்க 2 புதிய கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு சானிட்டரி நேப்கின் வழங்கும் இயந்திரங்கள், எரிக்கும் இயந்திரங்கள், சாப்பிடுவதற்கு தனி பகுதி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு துப்புரவு பணி, நீச்சல் பயிற்சி உட்பட பல பணிகளை மேற்கொள்வதற்கு பெண் ஊழியர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சில்கா கடற்படை தளத்தில் 13 பெண் அதிகாரிகள் உட்பட 50 அதிகாரிகள் உள்ளனர். இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் வசதிகளை கடற்படை பணி யாளர் பிரிவு தலைவர் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அக்னிவீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் குறித்து, அவருக்கு அதிகாரிகள் விளக்கினர். அக்னி வீரர்களுடன் தினேஷ் திரிபாதி கலந்துரையாடினார். கடற்படை பணியை கவுரவத்துடனும், தைரியத்துடனும் மேற்கொள்ள அக்னி வீரர்களை அவர் ஊக்குவித்தார்.