குஜராத் – இமாச்சலில் ஆட்சியமைக்க போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை

மிகுந்த பரபரப்பான சூழலில் நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
குஜராத்திலுள்ள 182 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல், கடந்த டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக களத்தில் நின்ற வேட்பாளர்கள் 1,621 என்றிருந்த நிலையில் அவர்களில் 4.9 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே முன்முனை போட்டி நிலவி வருகிறது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலமான இங்கு, தற்போது முதல்வராக பூபேந்திர படேல் உள்ளார். இவர் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
image
இத்தொகுதி மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியின் ஜிக்னேஷ் மேவானி (வட்கம் தொகுதி) ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுடன் காட்வி (கம்பாலியா தொகுதி), பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா போட்டியிடும் ஜாம்நகர் (வடக்கு தொகுதி) ஆகியவை முக்கிய தொகுதிகளாக உள்ளன. 
மலைப்பிரதேச மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 55.6 லட்சம் ஆக இருந்தது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் தற்போது முதல்வராக ஜெயராம் தாகூர் உள்ளார். இங்கும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.
image
குஜராத் – இமாச்சல பிரதேசங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் காலை 11:00 மணி அளவில் ஓரளவிற்கு வெற்றி வாய்ப்புகள் கணிக்கப்படும் என சொல்லப்படுகின்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸூக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகவும், குஜராத்தில் பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு சாதகமாகவும் இருப்பதாக தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியும் சில இடங்களில் வெற்றியை பதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று கட்சிகளுமே கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.