தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி மூலம் 2023-ல் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 சதவீதம் பேரைக்கூட டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்தாதது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.