“இது நேருவின் இந்தியா அல்ல” – ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி

இது நேருவின் இந்தியா அல்ல என்று சீனாவுடனான போர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, சீனா முழு போருக்கு தயாராகுவதாகவும், இந்திய அரசு தூங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவுடனான போர் குறித்து ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், சீனாவுடன் நெருக்கம் உள்ளதாக ராகுல்காந்தி உணர்கிறார் என்றார். சீனா என்ன செய்யும் என்பதை அறியும் அளவிற்கு அவர் நெருக்கம் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய வீரர்களின் துணிவை குறைக்கும் வகையிலும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல என்று சாடினார்.

தூங்கிக்கொண்டிருந்தபோது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளது என்று விமர்சித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது எண்ணற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது என்றார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.