ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எமனேஸ்வரன் மயான பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபர் பிணமாக கிடந்த பகுதியில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில், அந்த வாலிபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்று அதன் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு கண்ணன் ஏன் வந்தார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.