மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்: சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: இந்திய – சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவாதிக்க மறுக்கும் அரசு: இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்தும், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்திருக்கிறதா என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் இதற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றனர்.

காந்தி சிலை முன் போராட்டம்: இந்நிலையில், இதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள், சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால், திமுக எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சோனியா காந்தி கருத்து: இதையடுத்து, காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி, “விவாதம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது. எல்லையில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நாடாளுமன்றத்திற்கும் தெரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை. பொருளாதார ரீதியிலான பதிலடியை அரசு ஏன் சீனாவுக்குக் கொடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

சசி தரூர் பேட்டி: இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “நமது ராணுவம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அரசியல் தலைமை குறித்தே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கடமையை அது செய்கிறதா? எல்லை நிகழ்வு குறித்து ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அரசியல் தலைமையிடம்தான் நாங்கள் கோரிக்கையை வைக்கிறோம். விவாதம் நடத்தப்படுமானால், நிலைமையின் தன்மையை உணர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவாக நிற்கும். ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியும்” என தெரிவித்தார்.

மக்களவையில் அமளி: மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியதும், இந்திய – சீன எல்லை விவகாரம் குறித்து விவாதித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூடிய உடனேயே அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இந்திய – சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து சில நாட்களுக்கு முன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். இதையடுத்து, இது குறித்து கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்த விவகாரம் குறித்து மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையைக் காக்கும் பணியை நமது ராணுவ வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், முன் எப்போதும் இல்லாத அளவு அங்கு படைகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும், எல்லையை சீனா தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது என்றும் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.