ராகுலுடன் நடைபயணம் செல்வோரின் வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கும் பாஜக அரசு: காங்கிரஸ் மூத்த தலைவர் கண்டனம்

நூஹ்: ராகுலுடன் நடைபயணம் செல்வோரின் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அரியானா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கொரோனா வேகமாக பரவுவதால் நடைபயணத்தை ஒத்திவைக்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி நடைபயணத்தை ஒத்திவைக்க முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில் அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராகுலின் நடைபயணத்தில் பதாகை மற்றும் கட்சி கொடிகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். பாஜக ஆளும் மாநிலமான அரியானாயால் நடைபயணம் நடந்து கொண்டிருக்கிறது. ராகுலின் பேரணியில் பங்கேற்கும் காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.

இது பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல். ஜனநாயக நாட்டின் மக்கள் கேள்விகளைக் கேட்கலாம். அவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் மோடி அரசின் கண்மூடித்தனமான கொள்கைகளால், அவை சாத்தியமற்றதாகி வருகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.