உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விட்டதால், மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘மாமன்னன்’ படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உதய் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவரே சொல்லியிருந்தார்.
இதனால் ராஜ்கமல் தயாரிப்பின் 54-வது படமாக உருவாகும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிக்கப் போவது யார் என்றும், படத்தை பிரசாந்த் முருகேசன் தான் இயக்குகிறாரா என்பது குறித்தும் பேச்சு எழுந்தது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.
ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்காக பேசி வருகிறார்கள். அதனை பிரசாந்த் முருகேசன் தான் இயக்குகிறார் என்கிறார்கள். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் விசாரித்தோம்.
கமலின் குட்புக்கில் இருக்கும் விஜய்சேதுபதி, இப்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். ‘மெர்ரி கிஸ்துமஸ்’, ‘ஜவான்’, ‘காந்தி டாக்கீஸ்’, ‘மும்பைக்கார்’, தமிழில் ‘விடுதலை’ என பல படங்களில் நடித்து வருகிறார்.
‘கிடாரி’ இயக்குநர் பிரசாந்த் முருகேசனும் இன்னொரு பக்கத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் கௌதம்மேனனுடன் இணைந்து ‘குயின்2’ வெப்சீரீஸை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. இது தவிர அதர்வா, ‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிப்பில் வெப்சீரீஸ் ஒன்றையும் அவர் இயக்கி வருகிறார். அது ஆக்ஷன் டிராமா என்றும், அதன் படப்பிடிப்பும் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது என்றும் சொல்கிறார்கள்.
கமல் இப்போது அரசியல் வேலைகள், ‘இந்தியன் 2’ ‘பிக் பாஸ்’ போன்றவற்றின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால், 54வது தயாரிப்பு குறித்த பேச்சுக்கள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது என்கிறார்கள். அதனால் இயக்குநர்- ஹீரோ முடிவானாலும்கூட அதன் நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என்கின்றனர். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. அனேகமாக வரும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கலாம்.