சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், ஆதார் பதிவு மையங்களுக்கு சென்றும் அட்டையை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா சேவை மற்றும் பலன்களை பெற மக்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இதனை மேற்கொள்ள ரூ.25 மற்றும் ஆதார் பதிவு மையத்தின் மூலம் இந்த பணிக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்டேட் செய்வது எப்படி?
ஆன்லைன் மூலம் விலாசம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றபடி பெயர், பிறந்த தேதி, பாலினம், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் என அனைத்து விவரங்களையும் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகாமையில் உள்ள ஆதார் பதிவு மையத்தை uidai.gov.in தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதே தளத்தில் ‘மை ஆதார்’ டேபுக்கு சென்று ‘டெமோகிராபிக்ஸ் தரவைப் புதுப்பித்து நிலையைச் சரிபார்க்கவும்’ என்ற டேபை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பயனர்கள் தங்கள் தரவுகளை புதுப்பிக்க முடியுமாம். இதற்கு பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை, ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.