சென்னை: இம்மாதம் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் போன்கள் உட்பட சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன போன்கள் என்பதை பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் பழைய மாடல் போன்கள், பழைய இயங்குதளம் கொண்ட போன்கள் என சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் சேவையானது வரும் 31-ம் தேதி முதல் அறவே பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது. இதனை தொழில்நுட்ப செய்திகள் வெளியிட்டு வரும் நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அந்த 49 போன்கள்: ஆப்பிள் ஐபோன் 5, ஆப்பிள் ஐபோன் 5சி, ஆர்காஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE, கிராண்ட் எக்ஸ் குவாட், ஹெச்டிசி டிசையர், Huawei அசெண்ட் டி, அசெண்ட் டி1, அசெண்ட் டி2, அசெண்ட் ஜி740, அசெண்ட் மேட், அசெண்ட் பி1, குவாட் எக்ஸ்எல், லெனோவா ஏ820, எல்ஜி எனாக்ட், எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள், மெமொ ZTE, சாம்சங் கேலக்சி ஏஸ்2, கேலக்சி கோர், கேலக்சி எஸ்2, கேலக்சி எஸ்3 மினி, கேலக்சி டிரெண்ட் 2, கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி எக்ஸ்கவர் 2, சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல், விகோ போனில் 2 மாடல்கள் என மொத்தம் 49 போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காதாம்.
ஆண்டுதோறும் பழைய மாடல் போன்களில் தனது சப்போர்ட்டை வாட்ஸ்அப் நிறுத்திக் கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.