கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் உள்பட நாடு முழுவதும் அவசரகால ஒத்திகை தொடக்கம்; ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடக்கி வைத்தார்

சென்னை: கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது. கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பிஎஃப்-7 வகை தொற்று பரவுவதால், அதனை எதிர்கொள்ள நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தயார்நிலை குறித்த ஒத்திகை தொடங்கியது. இதில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் ஆக்சிஜன் இருப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட உள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்படும், வரும் 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதிவரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது எனவும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

நாட்டில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த கவனமாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. மக்கள் சரியான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்காக தான் இன்று நாட்டில் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடத்தப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.