இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவந்த நிலையில், அங்கு கடந்த டிசம்பர் 20-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், ஆட்சியமைப்பதற்கு138 இடங்கள் தேவை. ஆனால், 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.
பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் பகதூர் தூபா ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட் கட்சி) உள்பட 5 கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவந்தன.
புதிய அரசின் 5 ஆண்டு பதவிக் காலத்தில், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பிரதமராக இருக்க ஆதரவு அளிக்குமாறு தூபாவிடம் பிரசந்தா கோரினார். அதை, தூபா ஏற்கவில்லை. எனவே, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பிரசந்தாவின் கட்சி தூபா தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தூபாவின் கூட்டணி இழந்தது. இதனால், அங்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் கே.பிசர்மா ஒலியின் சி.பி.என்-யு.எம்.எல் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைக்க பிரசந்தா முயற்சிகள் மேற்கொண்டார்.
சி.பி.என் யு.எம்.எல்., சி.பி.என் எம்.சி., ஆர்.எஸ்.பி., ஆர்.பி.பி., ஜே.எஸ்.பி., ஜனமத், நகரிக் உன்முக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. ஆட்சி அமைக்கத் தேவையானதைவிட அதிகமாக, அதாவது 165 உறுப்பினர்களை இந்தக் கூட்டணி கொண்டுள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரசந்தா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டிசம்பர் 25-ம் தேதி ஆலோசனை நடத்தினர். அதில், சுழற்சி முறையில் அரசை வழிநடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. முதல் வாய்ப்பிலேயே பிரதமராக இருப்பதற்கு பிரசந்தா விரும்பினார். அவரின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பிரசந்தா. அதை எற்றுக்கொண்ட ஜனாதிபதி, நாட்டின் புதிய பிரதமராக பிரசந்தாவை நியமித்தார். அதைத்தொடர்ந்து, டிசம்பர் 26-ம் தேதி பிரதமராக பிரசந்தா பதவியேற்றார். சி.பி.என்-யு.எம்.எல் 78, சி.பி.என்-எம்.சி 32, ஆர்.எஸ்.பி 20, ஆர்.பி.பி 14, ஜனதா சமாஜ்பாடி கட்சி 12, ஜனமாத் 6, நகரிக் உன்முக்தி கட்சி 3, சுயேச்சை 3 உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராக பிரசந்தா பதவியேற்றிருக்கிறார்.
தற்போது பிரசந்தா பிரதமராகப் பொறுப்பேற்பது 3-வது முறையாகும். இதன் மூலமாக கடந்த ஒரு மாத காலமாக அங்கு நிலவிவந்த அரசியல் நிச்சயமற்ற நிலை தற்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. சுழற்சி முறையில் அதிகார உடன்பாடு என்றாலே எப்போதும் சிக்கல்தான். இந்த நிலையில், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் என்கிற இவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் எந்தளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்பதைச் சொல்ல முடியாது.
நீண்டகாலமாக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே நல்லுறவு நிலவிவந்தது. ஆனால், எல்லைப் பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது, நேபாள பிரதமராக பதவியேற்றருக்கும் பிரசந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.