வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் :சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணியருக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவை ஜன., 8 முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் 2019 டிச., மாதம் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஸ்தம்பிக்க செய்தது.
பின் உலகம் முழுதும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் தீவிரமடைந்தது.
இதை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான ஊரடங்கை கடைப்பிடித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதை தொடர்ந்து, அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இதன் விளைவாக சீனா முழுதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவத் துவங்கியதும் அதை, ‘ஏ’ வகை எனப்படும் அதிதீவிர தொற்றாக அந்நாட்டின் தேசிய சுகாதார கமிஷன் வகைப்படுத்தியது.
தற்போது, அதை, ‘பி’ வகை தொற்றாக அடுத்த மாதம் முதல் தரம் குறைப்பதாக நேற்று அறிவித்தது.
மேலும், சீனாவுக்கு வரும் வெளிநாட்டு பயணியர் அரசு கண்காணிப்பு மையங்களில், இரண்டு வாரங்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு கடைப்
பிடிக்கப்பட்டது. பின், அது ஐந்து நாளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 8ம் தேதி முதல், வெளிநாட்டு பயணியருக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.கடந்த மூன்றாண்டுகளாக மூடப்பட்டுள்ள சீன எல்லைகளையும் அந்நாட்டு அரசு திறக்க முடிவு செய்துள்ளது.தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது பல நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement