தைபே தைவான் நாட்டில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானுக்கு வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து சென்றால், உடனே அந்நாட்டை நோக்கி போர் விமானங்களை அனுப்பி சீனா மிரட்டி வருகிறது.
நேற்று முன்தினம், 24 மணி நேரத்துக்குள் 71 போர் விமானங்கள், ஏழு போர்க்கப்பல்களை தைவானுக்கு அனுப்பி அச்சுறுத்தியது.
இதையடுத்து, சீனாவை எதிர்கொள்ள தைவான் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், தைவானில் தற்போது நடைமுறையில் இருக்கும், இளைஞர்களுக்கான நான்கு மாத கட்டாய ராணுவ சேவையை, ஓராண்டாக உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தைவான் அதிபர் சாய் இங்- வென் கூறியதாவது:
சீனாவில் 1949ல் நடந்த உள்நாட்டு போரில் தைவான் தனி நாடாக உருவெடுத்தது. ஆனால், எங்கள் நாட்டை மீண்டும் கபளீகரம் செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது.
எங்கள் எல்லைக்கு போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எங்கள் ராணுவமும் தயாராகவே உள்ளது. எனினும், ராணுவத்தை பலப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
தற்போது, இளைஞர்களுக்கு நான்கு மாத ராணுவ சேவை கட்டாயம் என்ற சட்டம் தைவானில் நடைமுறையில் உள்ளது. இதை, 2024ம் ஆண்டு முதல் ஓராண்டு சேவையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
கடந்த 2005 ஜனவரி 1ம் தேதிக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்கு, இந்த புதிய முறை பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்