மனைவியின் மாதவிடாய் நாள்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா? அப்படி செய்தால் ஜன்னி வந்துவிடும் என்கிறார்களே உண்மையா? மாதவிடாய் ரத்தம் கணவரின் உறுப்பில் பட்டால் தொற்று ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகள் குறித்த பயம் பல ஆண்களிடம் இருக்கிறது.
மாதவிடாயின்போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா, கூடாதா என்று கேட்டால், சம்பந்தப்பட்ட கணவன், மனைவிக்கு சம்மதம் என்றால் தாராளமாக ஈடுபடலாம். அப்படி ஈடுபடுவதற்கு முன்பு, இருவரும் தங்கள் பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் வெளியேறக்கூடிய ரத்தமானது, பெண்ணின் ஜனன உறுப்பில் இருக்கும் வரை, காய்ச்சி வடிகட்டிய `டிஸ்டில்டு வாட்டர்’ போல சுத்தமாக இருக்கும்.
அந்த நேரத்தில் உறவு கொண்டால் கணவருக்குக் கிருமித்தொற்று வரும் என பயப்படத் தேவையில்லை. மாதவிடாய் ரத்தம் உடம்பில் இருந்து வெளியேறி, வெளிப்புற கிருமிகளால் தாக்கப்படும்போதுதான் கெட்ட வாடையே வரும்.
மாதவிடாய் நேரத்தில் பல பெண்களுக்கும் அசதி, வயிற்று வலி, அடி வயிற்று தசை இழுத்துப் பிடித்துக் கொள்ளுதல் என்று ஏதோவொரு சங்கடம் உடலில் இருக்கும். இப்படிப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உறவு கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம்.
உறவு கொள்ளும்போது கிடைக்கிற ஆர்கசம், கருப்பையில் இருக்கிற மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதால் கிடைக்கிற நிம்மதி போன்ற காரணங்களுக்காக, ஒரு சில பெண்கள் இந்த நேரத்து தாம்பத்திய உறவை விரும்பலாம்.
மாதவிடாய் நாள்களில் உறவு கொண்டால் ஜன்னி வருமா என்பது பலரின் கேள்வி. ஜன்னி என்பது டெட்டனஸ் என்கிற ஒரு நோயின் பெயர். இந்நோய் Clostridium tetani என்ற பாக்டீரியாவால் வரக்கூடியது. தூசு, இரும்பின் துரு, விலங்குகள் இவற்றின் மூலம் இந்த பாக்டீரியா மனிதனுக்குப் பரவும்.
ஜன்னி ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவாது. டெட்டனஸுக்கும் மாதவிடாய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியானவுடனே ஆணுறுப்பின் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை அதிகமாக இருக்கும். அதனால், மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுத்துக்கொள்ளலாம். இப்படி நிகழாமல் இருக்க ஆணுறை போட்டுக்கொண்டு உறவு கொள்ள வேண்டும்.